தினகரன் 31.08.2010
பெங்களூர் பட்ஜெட் நகல் முதல்வரிடம் மேயர் வழங்கினார்
பெங்களூர், ஆக. 31: மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு மேயர் எஸ்.கே.நடராஜ் மற்றும் துணை மேயர் தலைமையிலான குழு தொட்டகணபதி கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். முதல்வர் எடியூரப்பாவையும் சந்தித்து பட்ஜெட் நகலை அளித்தனர்.
பெங்களூர் மாநகராட்சியின் முதல் பட்ஜெட்டை நேற்று பா.ஜ. சார்பில் மேயர் எஸ்.கே.நடராஜ் தாக்கல் செய்தார். நேற்று பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு மேயர் நடராஜ், துணை மேயர் தயானந்த், வரி மற்றும் பொருளாதார நிலைக்குழு தலைவர் சதாசிவா தலைமையிலான குழு பசவனகுடியில் உள்ள தொட்டகணபதி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் முதல்வர் எடியூரப்பாவை அவரது வீட்டில் சந்தித்து பட்ஜெட் நகலை கொடுத்து ஆசி பெற்றனர்.
அப்போது மேயர் நடராஜ், பெங்களூர் மாநகராட்சி வளர்ச்சிக்காக ரூ 1500 கோடி நிதி அளிக்க வேண்டும். இன்று (நேற்று) நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு நிதி அளிப்பது தொடர்பாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
ஆனால் கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடப்பதால் தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளது. எனவே தற்போது நிதி ஒதுக்கீடு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிட முடியாது. எனவே அடுத்த கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கிறேன். மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்துங்கள் நான் துணையாக நிற்கிறேன் என்று எடியூரப்பா உறுதி மொழி அளித்தார்.
அதன்பிறகு பெங்களூர் மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.