தினமணி 19.08.2009
உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 4 கோடி மானியம்
கடலூர், ஆக. 18: ஆகஸ்ட் மாதத்துக்குக் கடலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தமிழக அரசு ரூ. 4.10 கோடி மானியம் வழங்கி இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு தனது சொந்த வருவாயில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு, குறிப்பிட்டத் தொகையை மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் மாநில நிதிக் குழு மானியமாக வழங்கி வருகிறது.
கடலூர் மாவட்டத்துக்கு ஏப்ரல் முதல் ஜூலை முடிய 4 மாதங்களுக்கு, ரூ. 16.37 கோடி வழங்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்துக்கு மாவட்ட ஊராட்சிக்கு ரூ. 17.51 லட்சம், 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ. 76.94 லட்சம், 681 ஊராட்சிகளுக்கு ரூ. 3.15 கோடி ஆக மொத்தம் ரூ. 4.10 கோடி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது.
கிராம ஊராட்சிகளுக்கு இந்தத் தொகையில் நிர்வாகச் செலவுக்கு ரூ. 2,73,65,925, மின் கட்டணம் மற்றும் குடிநீர் வாரியத்துக்குக்கான கட்டணங்கள் போன்ற செலவினங்களுக்கு ரூ. 42,22,683 என பிரித்து வழங்கப்பட்டு உள்ளது.