தினகரன் 21.12.2010
கோவை மாநகராட்சி பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல்
கோவை, டிச.21:
கோவை மாநகராட்சி ஆண்டு பட்ஜெட் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும்.
கோவை மாநகராட்சியின் ஆண்டு பட்ஜெட் தயாரிப்பு பணி வேகமாக நடக்கிறது. வரும் மார்ச் மாதம் பட்ஜெட்தாக்கல் செய்யப்படஉள்ளது. நடப்பாண்டில், மாநகராட்சி வருவாய் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் வரி விதிப்பு, சொத்து, தொழில், சேவை வரி விதிப்பு, குடிநீர் கட்டண வசூல் கடந்த ஆண்டை விட அதிகமாக நடந்துள்ளது. ஆனால், சம்பள கமிஷன் உத்தரவின் படி, சம்பள நிலுவை தொகை அதிகளவு வழங்கப்பட்டது.
ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் இதுவரை சுமார் 1300 கோடிரூபாய்க்கு தொகை செலவிடப்பட்டது. அனைத்து திட்டங்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் 30 சதவீதம் பங்களிப்பு தொகை செலுத்தவேண்டியுள்ளது. எனவே,மாநகராட்சியின் செலவினம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பில்லூர், சிறுவாணி குடிநீர் கட்டண தொகை நிலுவை தொகை 110 கோடி ரூபாய் உள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக குடிநீர் வாரியத்திற்கு, நிலுவை தொகை வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. இந்த தொகை பட்ஜெட்டில் சுமையாக இருக்கும் என கருதப்படுகிறது. புதிய ஆண்டு பட்ஜெட்டில் 2009&10ம் நிதி ஆண்டில் சேர்க்காமல் விட்ட திட்டங்களை, செயல்படுத்த கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுரங்க நடைபாதை திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது.
இதேபோல், கோவையில் மாநகராட்சி சார்பில் காந்திபுரத்தில் மட்டும் நடைபாதை மேம்பாலம் உள்ளது. நகரில் 15 இடங்களில் சுரங்க நடைபாதை மற்றும் நடைபாதை மேம்பாலம் அமைக்கும் திட்டம் நிலுவையில் உள்ளது. வீடு, வீடாக தரம் பிரித்த குப்பை சேகரிப்பு திட்டம், திட்ட சாலை பணி, நகர் முழுவதும் நடைபாதை, பஸ் ஸ்டாப் நிகழ்குடை அமைக்கும் திட்டங்கள் வரும் பட்ஜெட்டில் சேர்க்கப்படும். பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளின் கருத்துகளை கேட்டு சில புதிய திட்டங்களை பட்ஜெட்டில் சேர்க்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டம், இலவச காலணி வழங்கும் திட்டம் உள்பட 20 திட்ட பணிகள் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து பட்ஜெட்டில் கூட்டத்தில் கேள்வி எழும் வாய்ப்புள்ளது.