தினமணி 30.09.2009
இலந்தைகுளம் மனமகிழ் பூங்காவுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க அரசு உத்தரவு
திருநெல்வேலி, செப். 29: பாளையங்கோட்டை இலந்தைகுளத்தில் மனமகிழ் பூங்கா அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இலந்தைகுளத்தில் மனமகிழ் பூங்கா அமைக்க நீண்ட காலமாக திட்டமிடப்பட்டது. இதன் காரணமாக பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின்கீழ் இருந்த அக் குளம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அங்கு பூங்கா அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என, துணை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கடந்த மாதம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் விளைவாக தற்போது நகராட்சி நிர்வாக இயக்குநர் செந்தில்குமார், இலந்தைகுளத்தில் மனமகிழ் பூங்கா அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பும்படி கேட்டுள்ளார்.
அதன்படி விரைவில் திட்டத்துக்கு கலந்தாலோசகர் நியமிக்கப்பட்டு, திட்ட மதிப்பீடு பெற்று உடன் பூங்கா அமைக்க பணிகள் தொடங்கும் என்றார் அவர்.