Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போடி நகராட்சியில் ரூ.26 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம்

Print PDF

தினமணி 04.02.2010

போடி நகராட்சியில் ரூ.26 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம்


போடி, பிப். 3: போடி நகராட்சியில் ரூ. 26.28 கோடி மதிப்பீட்டில், பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி, அதற்கான பணிகளை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்.

தேனி மாவட்டம், லட்சுமிநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தை, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 16-ம் தேதி திறந்துவைத்து, ரூ. 85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். போடி நகராட்சியில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களையும் அவர் திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து, போடி நகர்மன்றத் தலைவர் ரதியாபானு சாகுல் கூறியதாவது:

மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றபின், தேனி மாவட்டத்திற்கு முதன்முறையாக வருகிறார். ஏற்கெனவே, போடி நகராட்சியின் நீண்டநாள் கோரிக்கையான, பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளார். இந்த பணிகள் ரூ.26.28 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை நாட்டி பணிகளை தொடங்கிவைக்க உள்ளார்.

மேலும், போடி நகராட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் கட்டிமுடிக்கப்பட்டுள்ள கட்டங்களையும் ஸ்டாலின் திறந்துவைக்கிறார். இதில், ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டடம், ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கணினிக் கூடம், ரூ.7 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள நவீனக் கழிப்பறை ஆகியவற்றை அவர் திறந்துவைக்கிறார்.

போடி நீதிமன்ற வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரூ.20 லட்சம் மதிப்பிலான மேல்நிலை குடிநீர் தொட்டி, தென்றல் நகரில் ரூ. 7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா ஆகியவற்றை அவர் திறந்துவைக்கிறார்.

நகராட்சிப் பகுதி-2 நிதியின் மூலம் ரூ. 20 லட்சம் செலவில் பெரியாண்டவர் ஹைரோட்டில் நவீன ஆடு அடிக்கும் இறைச்சிக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்துவைத்து பயன்பாட்டிற்கு வழங்க உள்ளார்.

போடி நகராட்சியில் ரூ.69 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, கட்டடங்களை ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார். அவரை வரவேற்க, போடி நகராட்சி சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

நகர்மன்றத் துணைத் தலைவர் எம். சங்கர், நகராட்சி ஆணையாளர் கே. சரவணக்குமார், மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் முன்னேற்பாட்டு பணிகளை செய்து வருகின்றனர்.

Last Updated on Thursday, 04 February 2010 11:23