தினமலர் 23.02.2010
மாநகராட்சி பட்ஜெட்: நாளை அனைத்து கட்சிக் கூட்டம்
சென்னை :சென்னை மாநகராட்சியில் 2010-11ம் ஆண்டின் பட்ஜெட் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சியின் 2010-11ம் ஆண் டின் பட்ஜெட் வரும் மார்ச் 15ல் வெளியிடப்பட உள்ளது. பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக பல்வேறு நிலைகளில் ஆலோசனைக் கூட்டங் கள் நடத்தப்பட்டு வருகின்றன.நேற்று காலை மேயர் சுப்ரமணியன் தலைமையில் கமிஷனர் ராஜேஷ் லக்கானி, துறைத் தலைவர்கள், மண்டல அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மண்டலங்களிலும் துறைகளிலும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் மண்டல அதிகாரிகள், துறைத் தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். ஆலோசனைக் கூட்டம் இரண்டு மணி நேரம் நடந்தது.2010-11ம் ஆண்டின் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக நாளை (24ம் தேதி) அனைத்து கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.இந்த பட்ஜெட்டில், கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு முக்கியத்தும் கொடுத்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் மேயர் கூறினார்.