தினமணி 25.02.2010
குடந்தை நகராட்சியின் நிதி நிலை அறிக்கை தாக்கல்
கும்பகோணம், பிப்.24: கும்பகோணம் நகராட்சியின் 2010-11 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ. 395 கோடி பற்றாக்குறை என அறிவிக்கப்பட்டது.
கும்பகோணம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் புதன்கிழமை தலைவர் சு.ப. தமிழழகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நகர்மன்ற மூத்த உறுப்பினர் ரா.துரை, நகர்மன்றத் துணைத் தலைவர் தர்மபாலன், நகராட்சி ஆணையர் பூங்கொடி அருமைக்கண், நகரமைப்பு முதுநிலை அலுவலர் கோபாலகிருஷ்ணன், நகராட்சிப் பொறியாளர், மேலாளர் மற்றும் உறுப்பினர்கள் விவாதித்தனர். தொடர்ந்து, 2010-11 ஆம்ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் 2010-11ஆம் நிதியாண்டின் மொத்த வருவாய் வரவு மற்றும் மூலதன வரவு ரூ. 3,925 கோடியும், வருவாய் மற்றும் மூலதனச் செலவுகள் ரூ. 4,320 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் நிகர பற்றாக்குறையாக ரூ. 395 கோடி என அறிவிக்கப்பட்டு, சொத்துவரி முதலான வருவாய் இனங்களில் விடுபட்ட இனங்களைக் கண்டறிந்து வரிவிதிப்புடன், வழக்கு இனங்கள் மற்றும் இதர நிலுவை இனங்களை நேரில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து தீவிர வசூல் செய்து நிதிப்பற்றாக்குறையை சீர் செய்வது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.