தினமலர் 26.03.2010
மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: ரூ.5.45 கோடி பற்றாக்குறை
சேலம்: சேலம் மாநகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 5 கோடியே 45 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் பற்றாக்குறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் குறித்து மேயர் ரேகாபிரியதர்ஷினி கூறியதாவது: சேலம் மாநகராட்சியில் 2010-11ம் ஆண்டு வருவாய் கணக்கு பிரிவின் மூலம் மொத்த வரவினம் 119 கோடியே 48 லட்சம் ரூபாய். மொத்த செலவினம் 122 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய். மூலதன கணக்கு பிரிவின் மூலம் மொத்த வரவினம் 170 கோடியே 5 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய். செலவினம் 172 கோடியே 23 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. மொத்த வரவு 289 கோடியே 53 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய். மொத்த செலவினம் 294 கோடியே 99 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பற்றாக்குறை 5 கோடியே 45 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்.
நடப்பு நிதியாண்டில்(2010-11) சொத்து வரி மூலம் 24 கோடியே 70 லட்சம் ரூபாய், தொழில் வரி மூலம் 3 கோடியே 90 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய், கேளிக்கை வரி மூலம் ஒரு கோடியே 30 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், முத்திரைத்தாள் கட்டணம் மூலம் 11 கோடி ரூபாய், குடிநீர் கட்டணம் மூலம் 18 கோடியே 58 லட்சம் ரூபாய், கல்வி வரி மூலம் 3 கோடியே 45 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், குத்தகை இனங்கள் மூலம் 4 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மாநகராட்சி கடைகள் மூலம் 3 கோடியே 10 லட்சம் ரூபாய், கட்டணங்கள் மூலம் 5 கோடியே 61 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய், அரசு நிதியுதவி மற்றும் மானியம் மூலம் 41 கோடி ரூபாய், இதர வருவாய் மூலம் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் மாநகராட்சி வருவாயை மேம்பாடு செய்தும், நிதி ஆதாரங்களை கூடுதலாக பெற்றும், சிக்கன நடவடிக்கை மூலமாகவும் பட்ஜெட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பற்றாக்குறை சரி செய்யப்படும். இவ்வாறு மேயர் ரேகாபிரியதர்ஷினி தெரிவித்தார்.