தினமணி 16.04.2010
15 வேலம்பாளையம் நகராட்சி திட்ட அறிக்கை ரூ. 135 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
திருப்பூர், ஏப். 15: 15 வேலம்பாளையம் நகராட்சி பகுதியில் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ரூ. 135 கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள திட்டஅறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரை அடுத்த 15 வேலம்பாளையம் நகராட்சியில் பெருகிவரும் மக்கள்தொகை, அதற்கு தேவையான குடிநீர் வசதிகள், சாலை, சாக்கடை கால்வாய், திடக்கழிவு மே லாண்மை உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து, 2010 முதல் 2015க்குள் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து திட்டப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர் உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அப்பட்டியலில், ரூ. 23.30 கோடியில் குடிநீர் வசதி, ரூ. 47.49 கோடியில் புதைவடிகால், ரூ. 2.29 கோடியில் திடக்கழிவு மேலாண்மை, ரூ. 27.49 கோடியில் மழைநீர் வடிகால், ரூ. 22.35 கோடியில் சாலை வசதி;ரூ. 3.75 கோடியில் தெருவிளக்கு வசதி, ரூ. 1.60 கோடியில் குடிசைப் பகுதி மேம்பாடு, ரூ. 5.20 கோடியில் இதர உள்கட்ட மைப்பு வசதிகள், ரூ. 1.33 கோடியில் கட்டங்கள் குறித்து வரைபடம் மற்றும் புவியலி ல் அமைப்பு என மொத்தம் ரூ. 134.80 கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கருத்துருவை மாநில அரசுக்கு அனுப்பி செயல்படுத்த, தமிழ்நாடு நகர் உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம், நகராட்சி நிர்வாக இயக்குநரகம் மற்றும் 15 வேலம்பாளையம் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொள்ளவும், திட்டப்பட்டியல் வியாழக்கிழமை நடந்த நகர்மன்ற ஒப்புதலுக்கு முன்வைக்கப்பட்டது.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலை குறித்து தமிழ்நாடு நகர் உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன ஆலோசகர் லட்சுமணமூர்த்தி விளக்கம் அளித்தார். அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் இத்திட்டப்பட்டியலுக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது