தினகரன் 15.06.2010
140 பேரூராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.6.25 கோடி நிதி
சிவகங்கை, ஜூன் 15: தமிழகத்தில் 140 பேரூராட்சிகளில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.6.25 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 561 பேரூராட்சிகளிலும் 2007&08 முதல் 2010&11 வரையிலான 4 ஆண்டுகளில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 கோடி செலவு செய்யப்பட்டு வருகின்றது.
அரசு மானியமாக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2010&11ம் ஆண்டில் மீதமுள்ள 141 பேரூராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சியில் மட்டும் நில தீர்வு செய்ய முடியாததால் அங்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற 140 பேரூராட்சிகளில் நடப்பாண்டில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான அரசு மானியத் தொகை ரூ.25 கோடியில் முதல் கால் ஆண்டிற்கான தவணை தொகை ரூ.6.25 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது. நகராட்சி நிர்வாக செயலர் நிரஞ்சன்மார்டி இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.