தினகரன் 30.06.2010
கரூர் நகராட்சிக்கு இழப்பீடு தொகை ரூ.3.87 கோடி மின்வாரியம் பாக்கி
கரூர், ஜூன் 30: கரூர் நகராட்சிக்கு, மின்சார வாரியம் இழப்பீட்டுத் தொகை ரூ.3 கோடியே 87 லட்சம் வழங்கவேண்டிய விவர பட்டியல் நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தமிழகத்தில் 16 ஆண்டுகளுக்கு முன் உள்ளாட்சி அமைப்பிடம் மின் விநியோகம் இருந்தது. 1994ம் ஆண்டு இவை தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கரூர் நகராட்சி வசம் இருந்த மின் விநியோகம் 1994ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி மின்வாரியத்தால் எடுத்து கொள்ளப்பட்டது. மின் விநியோகத்தை கையகப்படுத்தும் போது உள்ளாட்சி அமைப்பிற்கு இழப்பீட்டு தொகை கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும். கரூர் நகராட்சி ஏ என்ற நிலையை அடிப்படையாக கொண்டு இழப்பீடு தொகை பெற முடிவு செய்துள்ளது.
மின்வாரியம் விநியோகத்தை எடுத்து கொண்டபோது நஷ்டஈடு சரியாக கணக்கிடப்படாததால் சரி செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அறிக்கை அடிப்படையில் இறுதி முடிவு எடுக்க அரசு முடிவு செய்தது.
கடந்த மே 31ம் தேதி சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் நடந்த உயர்நிலை குழு கூட்டத்தில் கரூர் நகராட்சிக்கு, மின்வாரியம் வழங்க வேண்டிய ஈட்டுத்தொகை விவரப் பட்டியல் நேற்று நடந்த கரூர் நகராட்சி கூட்டத்தில் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.
கரூர் நகராட்சிக்கு, மின்சார வாரியம் வழங்கவேண்டிய அசல் தொகை ரூ.1,83,80,396. கடந்த 1.10.1995 முதல் 31.03.2010 வரை வட்டி ரூ.1 கோடியே 1 லட்சத்து 86 ஆயிரத்து 159, கரூர் நகராட்சி கணக்கில் இருந்து பிடித்தம் செய்த தொகை ரூ.1,56,58,109. நகராட்சி நிலுவை மின் கட்டணத்திற்கு வட்டி மற்றும் அபராத வட்டி ரூ.84,56,134. கடந்த 30.04.1995க்கு பிறகு மின் வாரியம் வசூல் செய்த நகராட்சிக்கு வரவேண்டிய மின் கட்டணம். ரூ.81,15,145. நகராட்சி கட்டடத்தை பயன்படுத்திய வாடகை அசல் ரூ.20,65,500. நகராட்சிக்கு வரவேண்டிய அசல், வட்டி ரூ.6 கோடியே 28 லட்சத்து 61 ஆயிரத்து 443.
கரூர் நகராட்சி, மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின்கட்டணம் ரூ.2 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 248. இதுபோக, கரூர் நகராட்சிக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கவேண்டிய தொகை ரூ.3,87,7195 என விவரம் தெரிவிக்கப்படுள்ளது.