தினகரன் 22.07.2010
கோடம்பாக்கம் மேம்பாலம் ரூ4.7 கோடியில் பழுதுபார்ப்பு
சென்னை, ஜூலை 22: கோடம்பாக்கம் மேம்பாலம் ரூ4.73 கோடி செலவில் பழுது பார்க்கப்படுகிறது. இந்த பணி அடுத்த மாதம் தொடங்குகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் பாலங்களில் ஒன்று கோடம்பாக்கம் மேம்பாலம்.
இதில் ஒரு மணி நேரத்தில் 20 ஆயிரம் வாகனங்கள் செல்வதாக கூறப்படுகிறது. பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதை பழுதுபார்த்து, பலப்படுத்தி அழகுபடுத்த மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக கோடம்பாக்கம் மண்டலக் குழு கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி தலைமை பொறியாளரும் கடந்த மாதம் தொழில்நுட்ப ஒப்பதல் அளித்தார். ரூ4கோடியே 73 லட்சத்து 84 ஆயிரம் செலவில் மேம்பாலத்தை பழுதுபார்த்து மேம்படுத்துவதற்கான தீர்மானம் கடந்த மாதம் 21ம் தேதி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் மா.சுப்பிரமணியனால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த பணிக்கான டெண்டர் விரைவில் கோரப்பட்டு ஆகஸ்ட் மாதம் பழுது பார்க்கும் பணி தொடங்கவுள்ளது. முதலில் மேம்பாலத்தின் தூண்கள் பழுது பார்க்கப்படும். அதைத் தொடர்ந்து கான்கிரீட் தளம் பழுது பார்க்கப்படும். சைதாப்பேட்டையிலுள்ள மறைமலையடிகள் பாலம் சீரமைக்க கையாளப்பட்ட தொழில்நுட்பத்துடன் இந்த பணிகள் செய்யப்படும். போக்குவரத்து பாதிக்காத அளவில் பணிகள் நடக்கும் என்று மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.