தினகரன் 01.11.2010
மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை நேரு நகர் மேம்பாட்டு திட்டப்பணிக்கு சிக்கல் ரூ300 கோடிக்கு கடன் எதிர்பார்ப்பு
மதுரை, நவ.1: நேரு நகர் மேம்பாட்டு திட்டப்பணிகளை முழுமையாக முடிக்க மாநகராட்சியில் நிதி இல்லை. இதனால், டுவிட்கோ நிறுவனத்திடம் ரூ.300 கோடி கடன் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரையில் நேரு நகர்புற மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்துள்ளன. இதில் வைகை 2வது குடிநீர் திட்டப்பணி முழு அளவில் நிறைவடைந்துள்ளன. மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடை போன்ற பணிகள் முழுமையாக முடிவடையவில்லை.
இத்திட்டங்களுக்கு மத்திய அரசு 50 சதவீதம், தமிழக அரசு 20 சதவீதம் அளித்துள்ளது. மீதமுள்ள 30 சதவீதம் மாநகராட்சி அளிக்க வேண்டும். ஏற்கனவே அளிக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டை விட கூடுதல் மதிப்பீடு ஏற்பட்டால், அதையும் மாநகராட்சியே ஏற்க வேண்டிய நிலை உள்ளது. மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை நிலவுகிறது. மாநகராட்சி பங்கீட்டு நிதி ஒதுக்காமல் திட்டப்பணிகளை முடிக்க முடியாத இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. இதை முடித்தால்தான், அடுத்த பணிக்கான நிதியை மத்திய அரசு அளிக்கும்.
அரசின் டுவிட்கோ நிறுவனத்திடம் மாநகராட்சி ரூ.300 கோடி கடன் கோரியுள்ளது. இதை அளிக்க டுவிட்கோ நிறுவனம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இதை மாநகராட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் பணிகளை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.