தினமணி 06.03.2010
கரூருக்கு புதை சாக்கடை அடைப்பைச் சரிசெய்யும் இயந்திரம்
கரூர், மார்ச் 5: கரூர் நகராட்சிக்கு ரூ. 30 லட்சத்தில் புதை சாக்கடை அடைப்புகளைச் சரிசெய்யும் இயந்திரம் (படம்) வாங்கப்பட்டது.
கரூர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் புதை சாக்கடைத் திட்டம் நடைமுறையில் உள்ளது. எனவே, புதைசாக்கடையில் ஏற்படும் அடைப்புகளைச் சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய இயந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, நகராட்சியின் இடைநிரப்பு நிதி மூலமாக ரூ. 30 லட்சத்தில் இதற்கான வாகனம் அண்மையில் வாங்கப்பட்டது. இந்த வாகனத்தை நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நகராட்சித் தலைவர் பி.சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். கரூர் மக்களவை முன்னாள் உறுப்பினர் கே.சி. பழனிசாமி, திமுக மாவட்டப் பொறுப்பாளர் நன்னியூர்ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று புதிய இயந்திர வாகனத்தைத் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், நகராட்சி துணைத் தலைவர் பி. கனகராஜ், ஆணையர் (பொ) சி. ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பூவை ரமேஷ்பாபு, கவுன்சிலர்கள் வே. கதிரவன், எம். ராஜலிங்கம், ச. பரமேஸ்வரி, கி. வடிவேல், நகர்நல அலுவலர் கே. சந்தோஷ்குமார், திமுக இளைஞரணித் துணை அமைப்பாளர் காலனி செந்தில் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.