தினமலர் 15.04.2010
மாநகராட்சி பணியாளருக்கு நிலுவைத்தொகை வழங்கல்
திருச்சி: திருச்சி மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆறாவது சம்பள கமிஷன் நிலுவைத் தொகையின் இரண்டாவது தவணைத் தொகை 2.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் பால்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆறாவது சம்பள கமிஷன் நிலுவைத் தொகையின் இரண்டாவது தவணைத் தொகையை ஏப்ரல் மாத ஊதியத்துடன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, திருச்சி மாநகராட்சியில் பணியாற்றும், இரண்டாயிரத்து 657 அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு இரண்டு கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து 588 ரூபாயும், ஆயிரத்து 326 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 31 லட்சத்து ஏழாயிரத்து 976 ரூபாய் என மூன்றாயிரத்து 983 பேருக்கு, மொத்தம் 2.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.