தினமலர் 30.04.2010
புதிய காய்கறி மார்க்கெட்டில் வாடகை நிர்ணயம்
மதுரை:மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் அமைய உள்ள புதிய கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தற்போதைய சென்ட்ரல் மார்க்கெட்டில் புதினா, கறிவேப்பிலை, மல்லி, பச்சை மிளகாய், இஞ்சி வியாபாரிகள் சங்கம், எம்.ஜி.ஆர்., அனைத்து காய்கறி சில்லரை வியாபாரிகள் நலச்சங்கம், வாழை இலை சில்லரை வியாபாரிகள் சங்கம், மதுரை பசும்பொன் முத்துராமலிங்கம் மேட்டுப்பகுதி காய்கனி கமிஷன் வியாபாரிகள் சங்கம், சென்ட்ரல் மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்கம், சென்ட்ரல் மார்க்கெட் தக்காளி மற்றும் சீமைக்காய் வியாபாரிகள் சங்கம், வடக்கு ஆவணி மூல வீதி சென்ட்ரல் மார்க்கெட் மேட்டுப்பகுதி வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் கடை வைத்துள்ளனர்.
இவர்கள் தவிர, மீதி உள்ள கடைகள், ஏலத்தின் மூலம், புதியவர்களுக்கு ஒதுக்கப்படும். இக்கடைகளுக்கான வாடகையை மாநகராட்சி நிர்ணயித்துள்ளது. 20க்கு 20 அடி அளவுள்ள பெரிய கடைகளுக்கு மாத வாடகை ஆறாயிரம் ரூபாய் எனவும், மற்ற கடைகளுக்கு அளவுக்கு ஏற்ப 4 ஆயிரம் ரூபாய், 2 ஆயிரத்து 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய், ஆயிரத்து 500 ரூபாய் எனவும் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.