தினமலர் 30.04.2010
புதிய பஸ்ஸ்டாண்டு வாகன காப்பக்தில் ஸ்மார்ட் கார்டு திட்டம் துவக்கம் : ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருவாய் கிடைக்கும்
திருநெல்வேலி : நெல்லை புதிய பஸ்ஸ்டாண்டு வாகன காப்பகத்தில் ஸ்மார்ட் கார்டு சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பஸ்ஸ்டாண்டு வாகன காப்பகம் தனியார் வசம் இருந்த போது பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து வாகன காப்பகம் ஒப்பந்தம் தனியாரிடம் இருந்து மாநகராட்சி வசம் வந்தது. தற்போது வாகன காப்பகத்தில் கம்ப்யூட்டர் ரசீதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வாகனங்களுக்கு ஸ்மார்ட் கார்டு சிஸ்டம் வழங்கும் திட்டம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் வாகன உரிமையாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டைகளை வழங்கி திட்டத்தை துவக்கிவைத்தார். துணை மேயர் முத்துராமலிங்கம், மேலப்பாளையம் மண்டல தலைவர் முகம்மது மைதீன், கமிஷனர் பாஸ்கரன், நகரப் பொறியாளர் ஜெய்சேவியர், உதவிக்கமிஷனர் கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காப்பகத்திற்கு வரும் வாகனங்களுக்கு 2 விதமான நிறங்களில் தனித்தனியாக அடையாள மின் அட்டைகள் வழங்கப்பட்டது. இதில் தினந்தோறும் நிறுத்தி எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மஞ்சள் கலரில் அடையாள அட்டை வழங்கப்படும். சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை பயன்படுத்தி மாதக் கணக்கில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
மாத அட்டைக்கு ரூ.90ம், டெபாசிட் தொகையாக ரூ.50ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அட்டைகளை தொலைத்தால் அபராதத் தொகையாக ரூ.50 வசூலிக்கப்படும். நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்துள்ள கணக்குப்படி ஆண்டுக்கு வாகன காப்பகம் மூலம் ரூ.40 லட்சம் வருவாய் கிடைக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.