பல்லடம் நகராட்சியில் வரவு-செலவு அறிக்கை தாக்கல்
பல்லடம் நகர்மன்றத்தில் ரூ.12 கோடிக்கு 2013-14ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பல்லடம் நகராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் பி.ஏ.சேகர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் பி.கே.பழனிசாமி, ஆணையாளர் சி.சாந்தகுமார், சுகாதார ஆய்வாளர் சரவணன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில், நகராட்சி மொத்த வருவாய் ரூ.12 கோடியே 71 லட்சம் எனவும், செலவினம் ரூ.10 கோடியே 65 லட்சம், உபரி ரூ.2 கோடியே 6 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு உபரி வருவாய் ரூ.1 கோடியாக இருந்தது.
நகரில் முக்கிய இடங்களில் தெரு விளக்குகள் அமைக்க ரூ.15 லட்சம், துப்புரவுப் பணி மற்றும் பொது சுகாதாரப் பணிகளுக்கு ரூ.37 லட்சம், குடிநீர் விநியோக குழாய்கள், ஆழ்குழாய் பம்புகளைச் சீரமைத்தல், பராமரித்தலுக்கு ரூ.42 லட்சத்து 50 ஆயிரம், தெரு விளக்குகள் பராமரிப்புச் செலவுக்கு ரூ.35 லட்சம், குழாய் விஸ்தரித்தல், தார்ச் சாலை அமைத்தல், வடிகால் கட்டுதல், கான்கிரீட் தளம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு ரூ.3 கோடியே 85 லட்சம், பூங்கா அமைக்க ரூ.10 லட்சம், பாலங்களைப் பராமரிக்க ரூ.10 லட்சம் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதில், 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.