தினமணி 05.05.2010
ரூ.30 கோடியில் லால்பாக் பூங்கா அழகுபடுத்தப்படும்: முதல்வர்
பெங்களூர், மே 4: தில்லி ஜவாஹர்லால் நேரு பூங்காவைப் போல ரூ.30 கோடியில் பெங்களூர் லால்பாக் தாவரவியல் பூங்கா அழகுபடுத்தப்படும் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள லால்பாக் தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்று பார்வையிட்டார் முதல்வர் எடியூரப்பா. அங்கு காலைநேரத்தில் நடைப் பயற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பிறகு அங்கு நிருபர்களிடம் எடியூரப்பா கூறியது: தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பூங்கா மிகவும் அழகாக பராமரிக்கப்படுகிறது. உலக மக்களின் கவனத்தை அந்தப் பூங்கா கவர்ந்துள்ளது. அதுபோல் லால் பாக் பூங்காவும் அழகுபடுத்தப்படும். இதற்காக பெங்களூர் நகர வளர்ச்சி ஆணையம் (பிடிஏ) ரூ.30 கோடி செலவிட உள்ளது. இந்தத் தோட்டத்தில் உள்ள ஏரிகள் தூர்வாரப்பட்டுசீரமைக்கப்படும்.
சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு ûமாதனம் அமைக்கப்படும். பெரியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள தனி வழி ஏற்படுத்தப்படும். இங்குள்ள ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் அதிக அளவில் செடி கொடிகள் வைத்து, இந்தத் தோட்டம் இன்னும் பசுமையாக்கப்பட்டு அழகுபடுத்தப்படும்.
அதுபோல் கழிப்பறை வசதி, பாதுகாப்பு வசதி, குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் அந்த நிதியில் இருந்து செய்யப்படும். முதியோருக்கு லால்பாக் பூங்காவுக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
லால்பாக் பூங்காவில் தற்போது மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை இதற்கு ரூ.17 கோடி செலவிடப்பட்டுள்ளது. லால்பாக்கின் நான்கு பகுதிகளிலும் அழகிய பூங்காக்கள் அமைக்கப்படும். பிச்சைக்கார்கள் தொல்லை ஒழிக்கப்படும்.
பெங்களூர் மாநகராட்சி தற்போது மேயர் நிர்வாகத்திற்கு வந்துள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதிகள் நிர்வாகத்தில் மேயர் மற்றும் கவுன்சிலர்களிடம் பொதுமக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இந்த நகரை தூய்மையான நகரமாகவும், பசுமையான நகரமாகவும் வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பார்கள் என்று மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
அதற்கான நடவடிக்கையை மேயர் எடுக்க வேண்டும். நகரில் உள்ள ஏரிகளை சீரமைத்து அழகுபடுத்த வேண்டும். தரமான சாலைகளை அமைக்க வேண்டும். நகரின் மேம்பாட்டுக்கு அனைவரின் ஒத்துழைப்புடன் மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
முதல்வருடன் அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு, சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார், மேயர் எஸ்கே நடராஜ், துணை மேயர் தயானந்த் மற்றும் கவுன்சிலர்கள் வந்திருந்தனர்.