தினமணி 12.05.2010
திண்டிவனம் நகராட்சியில் ரூ.50 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்
திண்டிவனம், மே 11: திண்டிவனம் நகராட்சியின் அவசர கூட்டம் செவ்வாய்க்கிழமை நகர மன்ற தலைவர் பூபாலன் தலைமையில் (படம்) நடைபெற்றது.
÷கூட்டத்துக்கு நகராட்சி ஆணையாளர் முருகேசன், சுகாதார அலுவலர் பாலச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ராஜரத்தினம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அவரச கூட்டத்தில் மொத்தம் உள்ள 33 நகர மன்ற உறுப்பினர்களில் 17 பேர் கலந்து கொண்டனர்.
÷கூட்டத்தில் 6 தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டு அதில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் சார்பில் நகர மன்ற தலைவரிடம் திண்டிவனம் நகரை மாவட்ட தலைநகரமாக அறிவிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்ற கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்த மன்ற கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படுமென நகர மன்ற தலைவர் பூபாலன் பதிலளித்தார். நகரில் உள்ள 33 வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகளுக்காக மொத்தம் ரூ.5,13,829 நிதி ஒதுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.