Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூங்கா நகரை தூய்மையாக்க திட்டம் : கலெக்டர் தகவல்

Print PDF

தினமலர்     20.05.2010

தூங்கா நகரை தூய்மையாக்க திட்டம் : கலெக்டர் தகவல்

மதுரை:உள்ளாட்சி மன்றங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த மே 25 முதல் 28 வரை 'மாஸ் கிளீனிங்' நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சி.காமராஜ் தெரிவித்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:மதுரை மாவட்டத்தின் 50 நாள் குடிநீர் தேவைக்கு வைகை அணையில் தண்ணீர் உள்ளது. அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. அதற்குள் தென்மேற்கு பருவமழை வந்துவிடும். எனவே குடிநீர் பிரச்னை வராது. குடிநீர் தட்டுப்பாடான கிராமங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜமாபந்தியில் பட்டா மாறுதல் தொடர்பான மனுக்கள் அதிகம் உள்ளன. அதில் பலவற்றை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டோம். மீதியுள்ளவை அந்தந்த தாலுகாக்களில் நேரடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் குறைகள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய், வளர்ச்சித் துறைகளில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த ஆண்டு 23 ஆயிரத்து 800 இலவச காஸ் சிலிண்டர்கள், இன்னும் ஒரு மாதத்தில் வழங்கப்படும்.

மாஸ் கிளீனிங்: மதுரை மாவட்ட கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் பாலிதீன் கழிவுகளுடன், குப்பை கூளங்கள் உள்ளன. மே 25 முதல் 28 வரையான நாட்களில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அனைத்து பகுதிகளிலும் 'மாஸ் கிளீனிங்' நடத்தப்பட உள்ளது. மாநகராட்சி பகுதியில் நான்கு மண்டலங்களிலும் ஒரு நாள் மாலை வேளையில் இப்பணி நடக்கும். இப்பணியில் அந்தந்த உள்ளாட்சி மன்ற ஊழியர்கள் அனைவரும் இடம்பெறுவர். இதற்கு, 'தூங்கா மதுரையை தூய்மை ஆக்குவோம்' என்ற 'ஸ்லோகன்' உருவாக்கப்பட்டுள்ளது.

அரசின் உயிர்காப்பீட்டு திட்டத்தில் 4 லட்சத்து 63 ஆயிரத்து 316 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 20 ஆயிரம் பேருக்கு ஜமாபந்தி முடிந்த பின் வழங்கப்படும். இலந்தை குளத்தில் 'டைடல் பார்க்' பணிகள் வரும் செப்டம்பருக்குள் முடிந்துவிடும். அரசு ஆஸ்பத்திரி விரிவாக்க கட்டடம், செல்லூர் ரயில்வே மேம்பால பணிகளையும் செப்டம்பருக்குள் முடிக்க உத்தரவிட்டு உள்ளோம். கிராமங்களில் முதியோர் உதவித் தொகை வழங்க விரைவில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஓட்டல் உணவுப் பொருளில் கலப்படம் செய்தது தொடர்பாக 285 கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ரூ. 6.70 லட்சம் மதிப்பில் உணவுப் பொருள் அழிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். திட்ட அலுவலர் பிச்சை, பொது வினியோக அலுவலர் முருகய்யா உடனிருந்தனர்.