தினகரன் 24.05.2010
காளப்பட்டி பேரூராட்சிக்கு மின் விளக்கு அமைக்க ரூ.57 லட்சம் மாநாட்டு மானியமாக ஒதுக்கீடு
கோவை, மே 24:கோவையில் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி ரூ.300 கோடி செல வில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகரை ஒட்டிய காளப்பட்டி பேரூராட்சி, சின்னியம்பாளையம், நீலம்பூர் கிராம ஊராட்சிகள் மற்றும் மயிலம்பட்டி பகுதிகளில் அவிநாசி சாலையில் மின் விளக்குகள் அமைக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றி யிருந்தன. இதில் ஊராட்சி பகுதிகளில் 76 மின் விளக்குகள் 10 மீட்டர் உயரம் கொண்ட டியூப்லர் கம்பத் தில் அமைக்கப்பட்டுகிறது. இதில் 250 வாட்ஸ் திறன் கொண்ட சோடியம் மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன.
இதேபோல் காளப்பட்டி பேரூராட்சியில் விமான நிலையம் ரோடு முதல் ஆர்.ஜி.புதூர் முருகன் கோவில் வரை 94 மின் விளக்குகள் 10 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகின்றன. இதற்கு தேவைப்படும் நிதியை அரசு மானியமாக வழங்கவேண் டும் என்று காளப்பட்டி பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது. மானியமாக ஒதுக்கீடு செய்ய அரசுக்கு பேரூராட்சி இயக்குநரும் பரிந்துரை செய்து மின் விளக்கு அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி மூலமே செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ரூ.57 லட்சம் மானியமாக ஒதுக்கீடு செய்து அரசு செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.