தினமணி 25.05.2010
பென்னாகரம் பேரூராட்சி குடிநீர்த் திட்டம் ஜூன் 15-க்குள் நிறைவடையும்: பொறியாளர் எம். மணிவேலு
தருமபுரி, மே 24: பென்னாகரம் பேரூராட்சி குடிநீர்த் திட்டம் ஜூன் 15-க்குள் முடிக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் நடைபெறும் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் எம். மணிவேலு கூறினார்.
பென்னாகரம் பேரூராட்சிக் குடிநீர் திட்டத்துக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் மின்சார கேபிள் பதிக்கும் பணி பென்னாகரத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தொடர்ந்து, எம். மணிவேலு நிருபர்களிடம் கூறியது:
பென்னாகரம் பேரூராட்சி குடிநீர்த் திட்டத்துக்காக சின்னாறு ஆற்றில் இருந்து 3 கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, பென்னாகரத்தில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத கிணற்றுக்குக் கொண்டுவரப்படும்.
பேரூராட்சி முழுவதும் விநியோகம் செய்வதற்காக குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 41,35,21 எச்.பி. மோட்டார்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்காக பென்னாகரம் துணை மின்நிலையத்திலிருந்து 14 கி.மீ. தூரம் மின்சார கேபிள்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஜூன் 15-க்குள் முடிக்கப்பட்டு, பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகம் நடைபெறும் என்றார். மின்வாரிய செயற்பொறியாளர் (பொது) கே. நடராஜன், செயற்பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.