தினகரன் 25.05.2010
போக்குவரத்தில் மாறுதல் ஓசூர் சாலையில் சுரங்க நடைபாதை பணி
பெங்களூர், மே 25:சுரங்க நடைபாதை அமைக்கும் பணி நடப்பதால், ஒசூர் ரோட்டில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்&ஒசூர் ரோட்டில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணியை பெங்களூர் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இதன் கட்டுமானப்பணி விரைவில் துவங்க உள்ளது. இப்பணி இன்னும் மூன்று மாதங்களில் நிறைவடையும் என தெரிகிறது.
இதனை முன்னிட்டு ஒசூர் ரோட்டில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மடிவாளா சுங்கச்சாவடியில் இருந்து நேராக மேம்பாலம் செல்ல அனுமதி இல்லை. அதற்கு பதிலாக மடிவாளா சுங்கச்சாவடி சர்க்கிளில் இருந்து செயின்ட் ஜான்ஸ்ரோடு மற்றும் மடிவாளா மார்க்கெட் பக்கம் திரும்பி, மேம்பாலத்தை அடையலாம். எலெக்ட்ரானிக் சிட்டி, சில்க் போர்டு, எச்.எஸ்.ஆர்.லேஅவுட் மற்றும் பி.டி.எம்.லேஅவுட்டில் இருந்து மெஜஸ்டிக், ஆடுகோடி மற்றும் எம்.ஜி.ரோடு செல்லும் வாகனங்கள் இடதுபக்கம் திரும்பி டோட்டல் மால் வழியாக செல்லலாம்.
கிருபாநிதி ஜங்ஷனில் இடதுபக்கம் திரும்பி, கோரமங்களா வாட்டார் டேங்க் ஜங்ஷன் மற்றும் சர்ஜாபூர் ஜங்ஷன் வழியாக செல்லலாம். சில்க் போர்ட் வழியாக கோரமங்களா பிடிஏ காம்ப்ளெக்ஸ், கோரமங்களா 80 அடி சாலை மற்றும் நீலசந்திரா செல்லும் வாகனங்கள், கோரமங்களா வாட்டர்டேங்க் ஜங்ஷனில் இடதுபக்கம் திரும்ப வேண்டும். சித்தார்தா காலனி, மாருதி நகர் செல்லும் வாகனங்கள், கோரமங்களா வாட்டர்டேங்க் ஜங்ஷனில் இடதுபக்கம் திரும்பி, கேந்திரியசதன் ரோடு மற்றும் மடிவாளா மெயின்ரோடு செல்லலாம். இந்திராநகர், தொம்ளூர், ஈஜிபுரா வழியாக மாருதிநகர், தாவரெகெரே மற்றும் மடிவாளா சுங்கச்சாவடி செல்லும் வாகனங்கள், கோரமங்களா வாட்டர்டேங்க் ஜங்ஷனில் இருந்து நேராக சென்று, கேந்தியசதனுக்கு பிறகு இடதுபக்கம் திரும்ப வேண்டுமென போக்குவரத்து போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.