தினகரன் 28.06.2010
அம்பத்தூர் பகுதியில் மக்கள் நல பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
ஆவடி, மே 28: அம்பத்தூர் பகுதியில் பூங்கா, சிறுபாலம், மழைநீர் வடிகால்வாய், பள்ளிக்கூடம் சீரமைப்பு உள்ளிட்ட மக்கள் நலப்பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி கூட்டத்தில் தலைவர் கே.என்.சேகர் தெரிவித்தார்.
அம்பத்தூர் நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் கே.என்.சேகர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கே.நீலகண்டன், ஆணையர் ஆசிஷ்குமார், பொறியாளர் ரவி, நகரமைப்பு அதிகாரி பாஸ்கரன், சுகாதார அதிகாரி மணிமாறன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பாலகுமரன் (திமுக), கோவிந்தராஜ் (பாமக), மதி (திமுக),மைக்கேல்ராஜ் (அதிமுக), வித்யா லட்சுமி (அதிமுக), தேவேந்திரகுமார் (அதிமுக) ஆகியோர் தெருவிளக்கு, சாலை பிரச்னைகள் குறித்து விவாதம் செய்தனர்.
இதற்கு பதிலளித்து தலைவர் கே.என்.சேகர் பேசியதாவது: அம்பத்தூர் நகராட்சி பகுதிகளில் பூங்காக்களை மேம்படுத்த ரூ.1.21 கோடி, தெரு விளக்குகளை பராமரிக்க ரூ.40 லட்சம், சிறு பாலங்கள் அமைக்க ரூ.1 கோடி மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.70 லட்சம், வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய சாலைகள் அமைக்க ரூ.14 லட்சம், பள்ளிக்கூடங்களை சீரமைக்க ரூ.15 லட்சம், கொரட்டூர் பஸ் நிலையத்தில் நிழற்குடை, கழிப்பிடம் கட்ட ரூ.20 லட்சம் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு சேகர் தெரிவித்தார். நகராட்சி தலைவர் தகவல்