தினகரன் 01.06.2010
அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 53.80 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணி
ஆரணி, ஜூன் 1: பின்தங்கிய மண்டல மானிய நிதி ரூ.53. 80 லட்சத்தில் அடிப்படை வசதிகள் செய்வது என்று ஆரணி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆரணி நகராட்சி மன்றக் கூட்டம் நேற்று அதன் தலைவர் சாந்தி லோகநாதன் தலைமையில் நடந்தது. இதில் ஆணையாளர் சசிகலா, துணைத் தலைவர் லட்சுமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஆரணி நகராட்சி பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் நிவாரண திட்டத்தின்கீழ் குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.10 லட்சத்தில் திட்டப்பணிகள் மேற்கொள்வது.
ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள அருணாசலஈஸ்வரர் கோயில் தெருவில் இயங்கிய மகப்பேறு நிலையத்தை நகர ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றி அமைப்பது.
2009&2010ம் ஆண்டுக்கான பின்தங்கிய மண்டல மானிய நிதியில் இருந்து ரூ.53.80 லட்சத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது.
தற்போது ஆரணி பகுதியில் குடிநீர் பிரச்னையை சமாளிப்பதற்காக ஆற்காடு பாலாற்றில் கூடுதலாக புதிய கிணறு ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைப்பது.
ஆரணி நகராட்சி தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், தரைத்தள நீர்தேக்கத் தொட்டிகள், மோட்டார் அறைகள் மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த மேல்நிலைநீர் தேக்கத் தொட்டிகளை சீரமைப்பது.
ஆரணி நகராட்சி புதிய பஸ் நிலைய பின்புறம் காலியாக உள்ள இடத்தில் புதியதாக 73 படக் கடைகள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன