தினமலர் 02.06.2010
ரூ.3.1 கோடியில் தெப்பக்குளத்தை அழகுபடுத்த மத்திய அரசு அனுமதி
மதுரை: மதுரை மாரியம்மன் தெப்பக் குளத்தைச் சுற்றி, 5 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்த முதலில் மாநகராட்சி திட்டமிடப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் தெப்பக்குளத்தைச் சுற்றி புற்கள், செடிகள், நடைபாதை, சுற்றுலா பயணிகள் அமர பெஞ்ச், அலங்கார விளக்குகள், சிமென்ட் பிளாக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு மட்டும் 3.1 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க, வைகை ஆற்றுப் படுகையில் 20 ஆழ்துளை கிணறுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு ஆகும் செலவை மத்திய அரசின் சுற்றலா வளர்ச்சி நிதியில் கீழ் பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் டில்லியில் நடந்த ஆய்வுகக் கூட்டத்தில் முதல்கட்டமாக, 3.1 கோடி ரூபாய் செலவில் செய்யப்படும் அழகுபடுத்தும் பணிக்கான முழு நிதியையும் தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆழ்துளை கிணறுகளுக்கான ஒப்புதல் பின்னர் கிடைக்கும் என கருதப்படுகிறது.