தினமணி 03.06.2010
ஆறுமுகனேரி காமராஜ் பூங்காவை சீரமைக்க பேரூராட்சி தீர்மானம்
ஆறுமுகனேரி, ஜூன் 2: ஆறுமுகனேரி காமராஜ் பூங்காவை சீரமைக்க பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் சா.பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. காமராஜ் பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் பழுதாகி உள்ளதால் அவற்றை மாற்றி புதியவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
வன்னிமாநகரம் மற்றும் காணியாளன்புதூர் ஆகிய பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு குடிநீர் குழாயில் புதிய குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. 17-வது வார்டு இலங்கத்தம் கோயில் தெரு, குத்துக்கல் சுவாமி கோயில் தெரு மற்றும் லட்சுமிஅம்மன் கோயில் தெரு ஆகிய தெருக்களில் உள்ள குடிநீர் இணைப்புகளில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால் ஆழ்குழாய் கிணறு மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோக குழாயிலிருந்து வால்வு தனியாக அமைத்து அப்பகுதிகளுக்கு மேலும் ஒரு மணி நேரம் சப்ளை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
ஆறுமுகனேரியில் உள்ள 12 குடிநீர் மேல்நிலை தேக்கத் தொட்டிகள், பயணிகள் நிழற்குடைகள் மற்றும் ஆறுமுகனேரி எல்கையில் உள்ள வரவேற்பு பலகைகள் அனைத்திற்கும் வண்ணம் தீட்டி தகவல்கள் குறிக்க முடிவு செய்யப்பட்டது. பேரூராட்சியில் நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு வசதியாக இங்குள்ள குடியிருப்புகளுக்கு விடுதலின்றி கதவிலக்கம் வழங்க திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டபடி செயல்படவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.