தினமணி 04.06.2010
ரேஸ்கோர்ஸ் பூங்கா அழகுபடுத்தும் பணி: மேயர், ஆணையர் ஆய்வு
கோவை, ஜூன் 3: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி ரேஸ்கோர்ஸில் உள்ள சாலையோர பூங்காவை அழகுப்படுத்தும் பணியை மேயர் ஆர்.வெங்கடாசலம், மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரம் முழுவதும் மேம்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நகரில் மொத்தம் 44 இடங்களில் ரூ. 8 கோடியில் தனியார் பங்களிப்புடன் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுதவிர சாலையோர பூங்காக்களை அழகுபடுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோர பூங்காக்களில் வண்ணம் பூசும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. பூங்காவின் வெளிப்புற சுவர்களில் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு வருகிறது.
இவற்றை மேயர் வெங்கடாசலம், ஆணையர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர். இதுதவிர சாலை விரிவாக்கப் பணிகள், திட்டச்சாலை அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அவர்கள், பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.