தினகரன் 09.06.2010
2008ல் உருவாக்கப்பட்ட ஈரோடு மாநகராட்சியில் புதிய பகுதிகள் சேர்ப்பு
ஈரோடு, ஜூன் 9: கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஈரோடு நகரா ட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஏற்கனவே நகராட்சியில் இருந்த 45 வார்டுகள் அப்படியே மாநகராட்சி வார்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நகரத்தை ஒட்டியுள்ள சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், காசிபாளையம், பெரியசேமூர் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிகள், பி.பெ.அக்ரஹாரம், சூரியம்பாளையம் பேரூராட்சிகள், திண்டல், முத்தம்பாளையம், வில்லரசம்பட்டி, கங்காபுரம் ஆகிய 3 ஊராட்சிகள் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு வார்டிலும் 10 ஆயிரம் மக்கள்தொகை இருக்கும் வகையில் வார்டுகள் பிரிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
இதன்படி, ஈரோடு மாநகராட்சி வார்டுகளை பிரிப்பதற்கான ஆய்வு நடந்தது. மாநகராட்சியை 4 மண்டலங்களாக பிரித்து, அதில் 60 வார்டுகள் ஏற்படுத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டல வாரியாக பிரிக்கப்பட்டுள்ள 60 வார்டுகளிலும் இடம்பெறும் பகுதிகளை, மாநகராட்சி நிர்வாகம் பட்டியலாக தயாரித்துள்ளது. இது அரசு நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு அரசு ஒப்புதல் வழங்கி, அரசாணை வெளியிடப்படும். அதன்பின்னர், புதிய வார்டுகள் செயல்படத் தொடங்கும்.