தினமணி 10.06.2010
சென்னையில் ரூ.10 கோடியில் புதிய மாதிரி நகரம்
வேலூர், ஜூன் 9: சென்னையில் ரூ.10 கோடியில் புதிய மாதிரி நகரம் அமைக்கப்படும் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநர் தர்மேந்திரபிரதாப் யாதவ் தெரிவித்தார்.
இது குறித்து வேலூரில் அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
நகர்ப்புற ஏழை மக்களுக்கு மானியத்துடன் கூடிய வட்டியில் கடன் வழங்கும் திட்டம் இந்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 சதவீதம் வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படும். குறைந்த வருவாய் பிரிவு (எல்ஐஜி) வீடு கட்ட ரூ.1.60 லட்சம் வரை 5 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் புதிய குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வேலூர், காஞ்சிபுரம், சென்னை, சேலம், ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் வீடுகள் கட்டும் பணி அடுத்த 3 மாதங்களில் தொடங்கப்படும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 1961-ல் தொடக்கப்பட்டது. இதுவரை 4 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது 25 ஆயிரம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கோவையில் 6 இடங்களில் வாடகை குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு வணிக வளாகமும் கட்டப்படும்.
சென்னையில் உள்ள பழைய அரசு அலுவலர்கள் வாடகை குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, புதியதாக அதிக எண்ணிக்கையில் வீடுகள் கட்டப்படவுள்ளன.
பட்டினப்பாக்கம் பகுதியில் ரூ.10 கோடியில் 51 ஏக்கர் பரப்பில் புதிய மாதிரி நகரமாக குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன என்றார் தர்மேந்திரபிரதாப்.