தினமணி 11.06.2010
டி.வி.எஸ். நகர் பூங்கா விரைவில் திறக்கப்படும்
மதுரை, ஜூன் 10: மதுரை டி.வி.எஸ். நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை பணிகள் முடிந்ததும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைப்பார் என மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சியில் உள்ள டி.வி.எஸ் நகரில் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.45 லட்சம் மதிப்பில் புதிதாக பூங்கா அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. ஆணையர் அதை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் மத்திய அமைச்சர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பூங்காசிறப்பாக அமைப்பதற்கு பெங்களூரில் இருந்து செடிகள் மற்றும் புல்வெளிகள்தருவிக்கப்பட்டு அதன் மூலம் இந்தப் பூங்கா அமைக்கப்படுகிறது. மேலும், இப்பூங்காவில் செயற்கை நீருற்றுக்கள், நடைபாதை மேடைகள் , குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், வண்ண மின் விளக்குகள் உள்ளிட்ட பொழுது போக்கும் விதத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பணிகள் முடிந்தவுடன் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியால் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், துணை ஆணையர் (தெற்கு) அ.தேவதாஸ், நிர்வாகப் பொறியாளர் சேதுராமலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.