தினகரன் 17.06.2010
ரூ.4.95 கோடியில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி புதிய கட்டிடபணி 75 சதவீதம் முடிவடைந்தது
வேலூர், ஜூன் 17: மாநகராட்சிக்கு ரூ.4.95 கோடியில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி அலுவலக புதிய கட்டிட பணிகள் 75 சதவீதம் முடிவடைந்தது.
வேலூர் மாநகராட்சிக்கு கன்டோன்மென்ட் ரயில்நிலையம் அருகே புதிய அலுவலகத்துக்கான கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.4 கோடியே 95 லட்சம் மதிப்பில் வாகனங்கள் நிறுத்த கீழ் தளம் மற்றும் தரைதளம், முதல்மாடி, 2வது மாடி என பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இதில் 75 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. கட்டிடத்துக்கான கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்தது. இப்போது பார்க் மற்றும் கட்டிடத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
லிப்ட் பொருத்தும் பணி, குடிநீர் இணைப்பு, மின்சார வசதி, மாமன்ற கூடத்துக்கு தேவையான வசதிகள் செய்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. கீழ் தளத்தில் 20 கார்கள் மற்றும் பைக்குகள், சைக்கிள்கள் என 200 வாகனங்கள் வரை நிறுத்தும் வசதியுடன் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய அலுவலக கட்டுமான பணிகளை நகராட்சிகளின் செயலாளர் நிரஞ்சன்மார்டி ஓரிரு நாட்களில் பார்வையிட உள்ளார். எனவே பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
பணிகள் முடிவடைந்ததும் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலினை வைத்து புதிய அலுவலகத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.