தினமணி 21.06.2010
அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழா
திருப்பரங்குன்றம், ஜூன் 20: திருப்பரங்குன்றத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழா, இலவசக் கழிப்பறை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நகராட்சித் தலைவி இரா.காந்திமதி தலைமை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் எம்.அக்கினிராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலர் பி.மூர்த்தி எம்எல்ஏ, மாநகர் மாவட்டச் செயலர் கோ.தளபதி, புறநகர் மாவட்ட துணைச் செயலர் எம்.எல்.ராஜ் ஆகியோர் நகராட்சி பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட பஸ் நிலையப் பயணிகள் நிழல் குடை, பாலாஜி நகரில் ரூ.15 லட்சத்தில் நவீன சிறுவர் பூங்கா, ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட அலுவலகக் கட்டடம், மூலக்கரை பகுதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி, எஸ்.ஆர்.வி நகர் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் மழைநீர் வடிகால், சிறுபாலம் ஆகியவையும், பொது நிதி ரூ.10 லட்சம் செலவில் கோயில் எதிரே கழிப்பறை, பஸ் நிலையத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் மூலம் சுமார் ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன கழிப்பறை ஆகியவற்றைத் திறந்து வைத்தனர்.