தினமலர் 21.07.2010
பூங்கா புதுப்பிக்கும் பணி துவக்கம்
மைசூர், ஜூலை 21: மைசூர் துணைநகர பஸ்நிலையத்திற்கு அருகேயுள்ள பீப்பிள்ஸ் பூங்காவை புதுப்பிக்கும் பணியை மைசூர் மாநகராட்சி மேற்கொண்டது.
மைசூர் துணைநகர பஸ்நிலையத்திற்கு அருகேயுள்ள பீப்பிள்ஸ் பூங்கா குப்பைக்கூளங்களால் எப்போதும் அலங்கோலமாக காட்சியளித்துவந்தது. இதனை சுத்தப்படுத்தி புதுப்பிக்க மைசூர் மாநகராட்சி மேயர் சந்தேஷ்சுவாமி முயற்சி மேற்கொண்டுள்ளார். அதன்படி, 150 துப்புரவுதொழிலாளர்கள், இரண்டு எஸ்கேவேட்டர்கள், லெவல்லர்கள், டிப்பர்களுடன் பூங்காவை சுத்தப்படுத்தி புதுப்பிக்கும் பணி நடந்தது. பூங்காவில் நிறைந்திருந்த தேவையற்ற செடிகள், களைகள், குப்பைக்கூளங்கள் அகற்றப்பட்டன. மேயர் சந்தேஷ்சுவாமி, துணை கலெக்டர் விஜயா, மாநகராட்சி சுகாதார அதிகாரி நாகராஜ், சுற்றுச்சூழல் பொறியாளர் ரேகா, முன்னாள் துணைமேயர் சாரதம்மா ஆகியோர் மேற்பார்வையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மேயர் சந்தேஷ்சுவாமி கூறியதாவது: பெங்களூரில் உள்ள லால்பாக் போல பீப்பிள்ஸ் பார்க்கையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இப்பூங்காவை பாரம்பரிய பூங்காவாக மேம்படுத்தப்படும். இதில் பாறைப்பூங்காவும் இடம்பெற்றிருக்கும். பூங்கா வளாகத்தில் மத்திய நூலகமும் அமைக்கப்படும். உச்சநீதிமன்ற ஆணைக்கேற்ப, பூங்கா நடுவே சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கோயில் மற்றும் மசூதி இடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.