Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொல்லிமலையில் ரூ.200 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 03.08.2010

கொல்லிமலையில் ரூ.200 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்

நாமக்கல், ஆக. 2: கொல்லிமலையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 200 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் செ. காந்திச்செல்வன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் திங்கள்கிழமை நடந்த வல்வில் ஓரி விழாவில் அவர் பேசியது:

கொல்லிமலையில் 1975-ல் வல்வில் ஓரி மன்னன் சிலையை திறந்து வைத்து சிறப்பு சேர்த்த தமிழக முதல்வர்தான் தொடர்ந்து கொல்லிமலையில் வல்வில்ஓரி விழா நடத்த அடித்தளம் அமைத்தார். மேலும், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 200 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன.

கொல்லிமலையில் பல்வேறு வகையான மூலிகைகள் உள்ளன. ஆங்கில மருத்துவத்தைவிட மூலிகை மூலம் அளிக்கப்படும் இயற்கை வைத்தியம்தான் சிறந்தது. மீண்டும் மூலிகை மருத்துவத்துக்கு மக்கள் மாறும் சூழல் ஏற்படும். இதனை அடிப்படையாகக் கொண்டுதான் கொல்லிமலையில் மூலிகை ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசு உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், கொல்லிமலை தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இனி 50 கி.மீ. தூரம் சென்று சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இராது. செம்மேட்டிலேயே அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

மலைக்கு வந்து செல்ல தற்போதுள்ள 70 கொண்டை ஊசி வளைவுகளால் போக்குவரத்து கடினமாக உள்ளது. எனவே, மாற்றுப் பாதையாக முள்ளுக்குறிச்சியிலிருந்து நரியங்காடு வரை புதிய பாதை அமைக்க ரூ. 11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. அடுத்த ஆண்டு வல்வில் ஓரி விழாவுக்கு வரும்போது புதிய பாதையை பயன்படுத்தும் சூழல் ஏற்படும். மேலும், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை குறுகிய தூரத்திலேயே தரைப்பகுதிக்கு கொண்டு சேர்ப்பதன் மூலம் லாரி வாடகை செலவும் மீதமாகும்.

சுற்றுலா மேம்பாட்டுக்காக ரூ. 1.99 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இவையனைத்தும் நிறைவு பெற்றால் கொல்லிமலை மிகச்சிறந்த சுற்றுலாதலமாக மாறும் என்பதில் ஐயமில்லை என்றார் அவர்.

ஆட்சியர் சகாயம் பேசுகையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்து நாணயங்கள் கொல்லிமலை வாசலூர்பட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சோழ சாம்ராஜ்யம்தான் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, வீரம், கொடை, காதல் என பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது. அத்தகைய தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழர்களின் பண்பாட்டையும் பேணி காப்பதற்காகவே வல்வில் ஓரிவிழா நடத்தப்படுகிறது என்றார்.