தினமலர் 09.08.2010
பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
தேனி: தேனியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தேனியில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் சின்னமாயன், மாவட்ட பொருளாளர் மாயாண்டி, விவசாய அணி மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் முனியாண்டி வரவேற்றார். மாநில பொது செயலாளர் இசக்கிமுத்து, தலைமை நிலைய செயலாளர் குருசாமி, மாநில துணை தலைவர் பெருமாள் உட்பட பலர் பேசினர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றிய அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றிக்கு பணியாற்றுவது. முல்லை பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த வேண்டும். தேனியில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். புதிய பஸ்ஸ்டாண்ட் பணிகளை விரைவு படுத்தவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.