தினகரன் 10.08.2010
கன்னாட் பிளேஸ் நடைபாதைகளில் கருங்கல் பதிப்பதில் சிக்கல்
புதுடெல்லி, ஆக. 10: நகரை அழகுபடுத்தும் பணியில் கருங்கற்பாளங்கள் பதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் கன்னாட் பிளேஸ் பகுதியில் விதவிதமான கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
காமன்வெல்த் விலையாட்டு போட்டிக்காக நகரை அழகுபடுத்தும் பணி கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரின் இதயமாக திகழும் கன்னாட்பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்து நடைபாதைகளும் ஒரே மாதிரி தோற்றம் அளிக்கும் விதத்தில் கருங்கற்பாளங்கள் பதிக்க வேண்டும் என்று என்று டெல்லி கலாச்சார ஆணையம் உத்தரவிட்டது. அந்த கற்பாளங்கள் கிடைக்காததால் கிரானைட் கற்களை பதிக்கலாம் என்று மாநகராட்சி ஆலோசனை தெரிவித்தது. அதை கலாச்சார ஆணையம் ஏற்கவில்லை.
இதனால் நடைபாதைகளை அழகுபடுத்தும் பணி இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்க இன்னும் 53 நாட்களே இருப்பதால், அவசர அவசரமாக பலவிதமான வண்ண கற்களை அப்பகுதியில் இருக்கும் வியாபாரிகளே நடைபாதைகளில் பதித்து வருகின்றனர். சில இடங்களில் மொசைக் கற்களும், சில பகுதிகளில் வண்ண வண்ண பளிங்கு கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.
இதனால் கன்னாட் பிளேஸ் நடைபாதைகள் அனைத்தும் விதவிதமான கற்கள் பதிக்கப்பட்டு வித்தியாசமான தோற்றத்துடன் விளங்குகிறது.