தினகரன் 16.08.2010
மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் வார்டு, மண்டலங்கள் அதிகரிக்கிறது வரும் தேர்தலில் பதவி ஒதுக்கீட்டிலும் மாறுதலாக வாய்ப்பு
மதுரை, ஆக. 16: மதுரை மாநகராட்சி எல்கை விரிவாக்கத்தில் வார்டு, மண்டலங்கள் இரு மடங்காக அதிகரிக்கின்றன. வரும் தேர்தலில் பதவி ஒதுக்கீட்டு முறையிலும் மாறுதல் வரலாம்.
மதுரை மாநகராட்சி எல்லை தற்போதுள்ள 52 சதுர கி.மீ. பரப்பளவில் இருந்து 200 ச.கி.மீ. ஆக விரிவாக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசித்து இறுதி வடிவம் கொடுக்க சென்னையில் இன்று (ஆக.16ல்) உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதற்காக மதுரையில் இருந்து ஆணையர் செபாஸ்டின் தலைமையில் குழு சென்றுள்ளது.
விரிவாக்கத்தின் மூலம் மாநகராட்சியில் பெரிய மாற்றம் ஏற்படும் என தெரிகிறது. 1971ல் மதுரை மாநகராட்சியானபோது 22 ச.கி.மீ. பரப்பளவில் இருந்தது. 1974ல் 13 கிராமங்கள் சேர்க்கப்பட்டு 52 ச.கி.மீ. பரப்பாகி 72 வார்டுகளாக்கப்பட்டன. 4 மண்டலங்கள் உள்ளன.
36 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விரிவாக்கத்திற்கு அரசு அறிவிப்பு வெளியானதும் வார்டு, மண்டலங்கள் பிரிப்புக்கு தனியாக குழு அமைக்கப்படும் என தெரிகிறது. குழு அறிக்கையின்படி வார்டு மண்டலங்கள் எண்ணிக்கை இரு மடங்காக வாய்ப்புள்ளது.
தற்போதுள்ள 72 வார்டுகளில், ஒரு சில வார்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கு அதிகமாகவும், ஒரு சில வார்டுகளில் 10 ஆயிரத்துக்கு குறைவாகவும் உள்ளன. இவை அனைத்தும் சட்டமன்ற தொகுதி மறு சீரமைப்பு பிறகு மாதிரி ஒரே சீரான முறையில் வாக்காளர் எண்ணிக்கை அமையும் வகையில் வார்டுகள் பிரிக்கப்படும்.
புதிதாக சேர்க்கப்படும் நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் ஒரே சீராக மாநகராட்சி வார்டுகள் உருவாக்கப்படும். தற்போது மாநகராட்சி மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 4 மண்டல தலைவர் பதவிகளில் பெண் இல்லை. எனவே மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு, 2011 அக்டோபரில் நடக்கும் மாநகராட்சி தேர்தலில் பதவிகளில் புதிய ஒதுக்கீட்டு முறை வரவும் வாய்ப்புள்ளது.
புதிய கிராமங்கள் மாநகராட்சி பகுதியில் இணைக்கப்படுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாநகராட்சி தரப்பில் கூறப்படுவதாவது:
பாதுகாக்கப்பட்ட குடிநீர், பாதாள சாக்கடை வசதி, சுகாதார வசதி, மின் விளக்கு, சாலை வசதி கூடுதலாக கிடைக்கும். நிலத்தின் மதிப்பு உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.