தினமலர் 19.08.2010
பழுதடைந்த சாலைகளால் மக்கள் அவதி; ரூ.33 கோடியில் 143 பணிகள்
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகள் 33 கோடியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சியில் 2010-11ம் ஆண்டிற்கு சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் பஸ்கள் செல்லும் சாலைகள், புராதன நகர சாலைகள், வழிபாட்டு தலங்களுக்கான சாலைகள், சுற்றுலா தலங்களுக்கான சாலைகள், கல்வி நிலையங்களுக்கு செல்லும் சாலைகள், தொழிற்கூடம் மற்றும் சந்தை பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் ஆகிய சாலைகளை அமைப்பதற்கு அதற்கான மதிப்பீடுகளை தயாரிக்க நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் மாநகராட்சியில் பல்வேறு வார்டுகளில் மொத்தம் 123 பணிகளுக்கு 2,913.52 லட்சம் மதிப்பில் சாலைகளை அமைக்க மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் கூடுதல் ஒதுக்கீடு கோரவும் முடிவு செய்யப்பட்டு மொத்தம் 20 பணிகள் 404.10 லட்சம் செலவில் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இன்று (19ம் தேதி) நடக்கும் மாநகராட்சி அவசர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் மொத்தம் 33 கோடி ரூபாயில் 143 பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை கவுன்சிலர்கள் பெரிதும் வரவேற்கும் சூழ்நிலையில் தீர்மானம் எளிதில் நிறைவேறும் என தெரிகிறது.