தினமலர் 19.08.2010
நேருஜி சிறுவர் பூங்காவில் ரூ.22 கோடியில் ஓட்டல், ஷாப்பிங் மால், கண்காட்சி அரங்கு வசதி
திருநெல்வேலி: பாளை நேருஜி சிறுவர் பூங்காவில் 22 கோடியில் ஓட்டல், ஷாப்பிங் மால் மற்றும் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட உள்ளது. பாளை நேருஜி சிறுவர் பூங்காவில் பல்நோக்கு கலையரங்கம் மற்றும் வணிக வளாகம் பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் மூலம் மானிய நிதி அல்லது திட்ட உருவாக்கல் மானிய நிதியில் இருந்து ஒரு வணிக நடவடிக்கைகளின் ஆலோசகரை நியமித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த இடத்தை ஆய்வு செய்து ஒருங்கிணைந்த ஓட்டல், ஷாப்பிங் மால் மற்றும் கண்காட்சி மையம் 22 கோடியில் அமைக்கலாம் என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு விருப்பம் தெரிவிக்கும் நிறுவனத்தை மாநில மற்றும் இந்திய அளவில் தேர்வு செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.