தினகரன் 26.08.2010
கோவை அருகே ரூ100 கோடியில் உயிரியல் பூங்கா
கோவை, ஆக. 26: கோவை எட்டிமடை அருகேயுள்ள கல்லாங்கொத்து கிராமத்தில் மாநகராட்சி சார்பில் பிரமாண்ட உயிரியல் பூங்கா அமைக்கப்படுகிறது. ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ100 கோடி செலவில் பூங்கா அமைக்கப்படும்.
நீர் யானை, யானை, காட்டெருமை, சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, மான், செந்நாய், முதலை, நீர் பறவைகள், வெளிநாட்டு பறவைகள் உட்பட 120க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளை ஜோடியுடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
உயிரினங்களை பல்வேறு மாநிலங்களில் பூங்கா, சரணாலயங்களில் இருந்து பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்காக கல்லாங்கொத்து கிராமத்தில் 69.7 ஏக்கர் நிலத்தை மாவட்ட வருவாய்த்துறையினர் மாநகராட்சிக்கு ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. கூடுதலாக தனியாரிடமிருந்து 14.2 ஏக்கர் நிலத்தை பெற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறியதா வது:
உயிரியல் பூங்கா அமைக்க கூடுதல் நிலம் பெறுவது குறித்து மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைத்து முடிவு எடுக்கப்படும். விரைவில் மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்தி முடிவு எடுப்பர். வருவாய்த்துறையினர் விரைவில் இடத்தை ஒப்படைப்பர்’ என்றார்.