தினகரன் 27.08.2010
மேயர் தகவல் வார்டு வளர்ச்சி பணிக்கு கவுன்சிலருக்கு நிதி ஒதுக்கீடு
பெங்களூர், ஆக. 27: பெங்களூர் மாநகராட்சி வார்டுகளில் வளர்ச்சி திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வதில் ஏற்றத்தாழ்வு பார்க்க மாட்டேன் என்று மேயர் எஸ்.கே.நடராஜ் தெரிவித்தார்.
மாநகராட்சியின் நாகபுரா வார்ட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு மையம், உடற்பயிற்சி நிலையம், நூலகம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: வார்டுகளில் சிறப்பான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த வசதியாக ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த விஷயத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் என்ற பேதம் பார்ப்பதில்லை. மொத்ததில் மாநகரில் மக்கள் தேவைகள் சந்திக்கும் வகையில் வளர்ச்சி திட்டம் செயல்படுத்த வேண்டும். இதை கருத்தில் கொண்டு அனைத்து கவுன்சிலர்களுக்கும் சமமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த விஷயத்தில் என் மீது யாரும் சந்தேக பார்வை பார்க்க வேண்டாம் என்றார்.