தினமலர் 27.08.2010
ரூ.54.50 லட்சத்தில் பெரும்பாக்கம் சாலைகள், பூங்கா சீரமைக்க முடிவு
பெரும்பாக்கம்: பெரும்பாக்கத்தில் சாலைகள் மற்றும் ராதா நகர் பூங்கா சீரமைக்க 54.50 லட்ச ரூபாயை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒதுக்கியுள்ளது.
பெரும்பாக்கத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல்வேறு காரணங்களுக்காக அப்பகுதி மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், இந்திரா நகரில் உள்ள ஏழு தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.,) 22.5 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில், 90 சதவீதம் சி.எம்.டி.ஏ.,வும், 10 சதவீதம் ஊராட்சியும் பங்களிக்கும். பெரும்பாக்கத்தில் குப்பைகள் எடுப்பதற்காக 7 லட்ச ரூபாய் செலவில் டிராக்டர் வாங்க நிதி ஒதுக்கியுள்ளது. அதேபோல, ராதா நகர் பூங்காவை சீரமைத்து சுற்றுச்சுவர், நடைபாதை ஆகியவை உருவாக்க 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், 80 சதவீதம் சி.எம்.டி.ஏ.,வும், தலா 10 சதவீதம் ஊராட்சி மற்றும் பொதுமக்களும் பங்களிக்கின்றனர். இதற்கான பணிகள் அடுத்து சில நாட்களில் துவக்கப்படவுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற, சமுதாயநலக் கூட சுற்றுசுவர் ஆகியவை 9.44 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ளன. இதில், 33.5 சதவீதம் பொதுமக்கள் நிதி மூலம் கட்டட்படவுள்ளது. இத்தகவலை ஊராட்சி மன்ற தலைவர் சுஹாசினி ரங்கராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜசேகர் ஆகியோர் தெரிவித்தனர்.