தினகரன் 31.08.2010
அறந்தாங்கி நகராட்சியில் எல்லா வார்டுகளிலும் ரூ3 கோடியில் பணிகள் நகர்மன்ற கூட்டத்தில் தேர்வு
அறந்தாங்கி, ஆக.31: அறந்தாங்கி நகராட்சி கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் ரூ.3கோடி மதிப்பில் பணிகள் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அறந்தாங்கி நகராட்சி நகர் மன்ற அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார்.
துணை தலைவர் கச்சு முகமது, ஆணையர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். தலைவர் பேசும்போது, சிறப்பு சாலைகள் திட்டம் 2010&11ன் கீழ் இயற்கை இடர்பாடுகள் மற்றும் குடிநீர் திட்டங்களில் பழுதடைந்துள்ள சாலைகளில் முன்னுரிமை அடிப்படையில் 25 கிமீ நீளத்திற்கு சாலைகள் சீரமைத்து புதுப்பித்ததற்கு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 27 வார்டுகளிலும் ரூ.3 கோடி 13 லட்சம் மதிப்பில் 46 வேலைகள் தேர்வு செய்யப்பட்டு மன்ற அனுமதிக்கு வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதற்கு பல கவுன்சிலர் எதிப்பு தெரிவித்து இதனை முன்கூட்டியே ஏன் தெரியப்படுத்தவில்லை.
சம்மந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்களை கேட்காமல் நீங்களாக எப்படி வேலைகளை எப்படி தேர்வு செய்தீர்கள் என கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை நகராட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்து இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய உள்ள தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் அறந்தாங்கி நகராட்சி கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்தும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.