Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் இணையும் ஊராட்சிகளில்மீண்டும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு

Print PDF

தினமலர் 03.09.2010

மாநகராட்சியில் இணையும் ஊராட்சிகளில்மீண்டும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியுடன் இணைய உள்ள நகராட்சிகள், ஊராட்சிகளிடம் இருந்து தற்போதைய மக்கள் தொகையை பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.திருப்பூர் மாநகராட்சியுடன் நல்லூர், 15 வேலம்பாளையம் நகராட்சிகள், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், தொட்டிய மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், ஆண்டிபாளையம் ஆகிய எட்டு ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன.அதற்கான அரசாணை சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதன் பின், "மங்கலம், இடுவாய் மற்றும் முதலிபாளையம் ஊராட்சிகளையும் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்' என, மக்கள் பிரநிதிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

நகராட்சிகள் மற்றும் எட்டு ஊராட்சிகளின் புள்ளிவிவரங்களை கடந்தாண்டு சேகரிக்கும் போது, முதலிபாளையம், மங்கலம், இடுவாய் ஊராட்சிகளிடமும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. மாநகராட்சி வார்டு பிரிக்கப்படும்போது, கூடுதல் தேவை ஏற்படும்போது, பயன்படுத்திக் கொள்வதற்காக, கூடுதலாக அவ்வூராட்சிகளில் பெறப்பட்டது.

இந்நிலையில், ஊத்துக்குளி ஒன்றியம் சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சி, பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சி, அவிநாசி ஒன்றியம் கணியாம்பூண்டி ஊராட்சிகளில் இருந்தும் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,"அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ள எட்டு ஊராட்சிகள், ஏற்கனவே நகரத்துக்கு ஈடாக வளர்ச்சி பெற்ற பகுதிகளாக உள்ளன. இதனால், அடுத்துள்ள ஊராட்சிகளிலும் அதிக மக்கள் வசிக்கின்றனர். ஒருங்கிணைந்த மாநகராட்சியாக அறிவிக்கப்படும் போது, மேலும் சில பகுதிகளை இணைக்க நேரிடும் என்பதால், கூடுதலான ஊராட்சிகளில் புள்ளிவிவரங்களை பெற்று தயாராக வைத்திருக்க வேண்டும் என தனி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். அதற்காக, 2001 மக்கள் தொகை, தற்போதைய மக்கள் தொகை, மொத்த பரப்பளவு விவரங்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,' என்றார்.

Last Updated on Friday, 03 September 2010 09:38