தினமலர் 09.09.2010
ரூ.335 கோடியில் முடிந்த பணிகள் திறப்பு: நலத்திட்டம் உதவி முதல்வர் வழங்கல்
திருச்சி: திருச்சியில் நேற்று நடந்த அரசு விழாவில், 335.73 கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்து, 194.66 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 12.66 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கு பயனாளிகளுக்கு முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
திறப்பு விழா கட்டிடங்கள் விபரம்: 12.01 கோடி ரூபாய் மதிப்பில் மாவட்ட புதிய கலெக்டர் அவலக கட்டிடம், 1.54 கோடி ரூபாய் மதிப்பில் தாலுகா அலுவலக புதிய கட்டிடம் உட்பட வருவாய், கல்வி, பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலன், கலை பண்பாட்டுத் துறை, முன்னாள் படை வீரர் நலன், போலீஸ், மாநகராட்சி, நெடுஞ்சாலை, தாட்கோ உள்ளிட்ட துறைகளில் அமைக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் திறக்கப்பட்டன.
மாநகராட்சியில் 143 கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட குடிநீர் விரிவாக்கத் திட்டப் பணிகள், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், வெள்ளத்தடுப்பு உள்பட 335.73 கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட 715 பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்.
அரசின் வீட்டுவசதித் திட்டத்தில், 63.35 கோடி ரூபாய் மதிப்பில், 8,447 கான்கீரிட் வீடுகள், முசிறி ஒன்றியம் காட்டுகுளத்தில் சமத்துவரம் உள்பட 194.66 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள 13 ஆயிரத்து 426 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதேபோல், 12.66 கோடி ரூபாய் மதிப்பில் வீட்டுமனைப்பட்டா, மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சுழல்நிதி, மாற்றுத் திறனாளிக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வானங்கள், முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி, சலவைப் பெட்டி, தையல் எந்திரம், கதிரடிக்கும் இயந்திரம் உள்பட 7,797 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், மத்திய இணையமைச்சர் நெப்போலியன், மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி, எம்.எல்.ஏ.,ககள் பெரியசாமி, சேகரன், ராஜசேகரன், ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.