தினமணி 14.09.2010
ஒசூர் நகராட்சியோடு 10 உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க முடிவு!
ஒசூர், செப். 13: ஒசூர் நகராட்சியுடன் 10 உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்க்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து, நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து, ஒசூரை மாநகராட்சியாக அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளாட்சித் துறைக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, ஒசூர் நகர்மன்றத்தின் அவரசக் கூட்டம், அதன் தலைவர் எஸ்.ஏ.சத்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அவர்
பேசியது:
சூசூவாடி, மூக்கணடப்பள்ளி, சென்னத்தூர், ஆவளப்பள்ளி ஆகிய 4 ஊராட்சிகள் மற்றும் மத்திகிரி பேரூராட்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்க தீர்மானம் நிறைவேற்ற முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த 5 உள்ளாட்சி அமைப்புகளோடு, பேரண்டப்பள்ளி, பேகேப்பள்ளி, கொத்தகொண்டப்பள்ளி, தொரப்பள்ளி, ஒன்னல்வாடி ஆகிய 5 ஊராட்சிகளையும் சேர்க்க வேண்டும். இதன் மூலம் 10 உள்ளாட்சி அமைப்புகள் நகராட்சியோடு இணையும் என்றார்.
இதற்கு திமுக, காங்கிரஸ், பாமக, அதிமுக உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.