தினமலர் 23.09.2010
மாநகராட்சியுடன் பூண்டியை இணைக்க வலியுறுத்தல்
அவிநாசி:திருமுருகன்பூண்டி பேரூராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டுமென கொ.மு.க., வலியுறுத்தியுள்ளது.திருமுருகன்பூண்டி நகர கொ.மு.க., சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்:திருப்பூர் மாநகராட்சியுடன் திருமுருகன்பூண்டியை இணைக்க வேண்டுமென, பேரூராட்சி நிர்வாகம் கடந்த 2007 ஜூலை 17ல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானத்தை வரவேற்று மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றியுள்ள நிலையில், இப்போது, இணைக்கக்கூடாது என்று பேரூராட்சி கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
திருப்பூருக்கு மிக அருகில் பூண்டி உள்ளதால், அதிகரித்து வரும் பனியன் நிறுவனங்கள், தொழிலாளர்களின் வருகையால் பெருகி வரும் குடியிருப்புகள் என வளர்ச்சி பல மடங்காக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மாநகராட்சியுடன் இணைக்கும்போது, பூண்டியின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கும்.தற்போது, பூண்டியில் மிக மோசமாக உள்ள சாக்கடை வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுவதோடு, மக்களின் பிரச்னையும் உடனுக்குடன் தீர வாய்ப்புள்ளது. மாநகராட்சியுடன் இணைந்தால் வரி உயரும் என்கின்றனர். ஆனால், தற்போது இணைய உள்ள 15 வேலம்பாளையம் மற்றும் ஊராட்சிகளிலும் ஏழை தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, மாநகராட்சியுடன் பூண்டி இணையும்போது அதிகரித்து வரும் குடியிருப்புகள், பொதுமக்களுக்கு அதிக வசதிகள் உடனுக்குடன் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.