தினமணி 23.09.2010
சிறுமுகை பேரூராட்சியில் ரூ. 13 லட்சத்தில்வளர்ச்சிப் பணிகள்
மேட்டுப்பாளையம், செப். 22: சிறுமுகை பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்கென ரூ. 12.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனது தொகுதி நிதியிலிருந்து இந்த நிதியை மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் ஒதுக்கீடு செய்துள்ளார். 6-வது வார்டில் ரூ. 50 ஆயிரம் செலவில் கான்கிரீட் தளம், 9-வது வார்டில் ரூ. 70 ஆயிரம் செலவில் வடிகால் வசதி, 10-வது வார்டில் ரூ. 65 ஆயிரம் செலவில் கான்கிரீட் சாலை, 1-வது வார்டில் ரூ. 3.25 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க புதிய கட்டடம், சிறுமுகைபுதூர் தொடக்கப் பள்ளியில் ரூ. 2 லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவர், எலகம்பாளையத்தில் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் தார்சாலை, சந்தை திடலில் ரூ. 3 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை ஆகிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் தொடக்க விழா மற்றும் பூமி பூஜை, சிறுமுகை தொடக்கப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் சிறுமுகை பாபு தலைமை வகிக்க, ராமமூர்த்தி வரவேற்றார். எம்எல்ஏ ஓகே சின்னராஜ் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காரமடை ஒன்றியக்குழு தலைவர் ராஜ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் கல்யாண சுந்தரம், தலைமை எழுத்தர் முத்துசாமி, வார்டு கவுன்சிலர்கள் சாமிநாதன், செல்வராஜ், அதிமுக செயலர் ரேணுகாராஜன், மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, கூட்டுறவு சங்க செயலர் சம்பத்குமார் கலந்து கொண்டனர்.